Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Written By We Are Anonymous on Tuesday, May 17, 2016 | 10:01 AM



நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் மலைப்பாங்கான பிரதேசங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக யாழ். மாவட்ட மீனவர்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் கடல் நீரில் அள்ளுண்டு சென்றுள்ளன.

சீரற்ற வானிலையால் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக தொழிலுக்கு செல்லவியலாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கரவெட்டி மற்றும் இன்பருட்டி பகுதிகளில் நேற்று வீசிய மினி சூறாவளியால் வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கனகாம்பிகை குளம் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இரணைமடு குளத்திற்கு செல்லும் பிரதான வீதியின் பாலம் உடைந்துள்ள நிலையில், பிரதேச மக்கள் மாற்று வீதியினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் ஏ-32 வீதி நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் பாதி்க்கப்பட்டுள்ளது.

தொடரும் மழையினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுள்ளது.

இதேவேளை, வவுனியா – மடு, பண்டிவிரிச்சான் பிரதான வீதி தொடர்ந்தும் நீரிழ் மூழ்கிக் காணப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தின் போது மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், கிண்ணியா, சம்பூர், சாம்பல் தீவு உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

தொடரும் மழையினால் கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதி மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கல்லாறு, மண்டூர், பட்டிருப்பு, கல்லடி போன்ற வாவிகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

போரைத்தீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காட்சியளிக்கின்றன.

இதேவேளை, அக்கரைப்பத்தன பகுதியில் லிந்துலை – டயகம பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் குறித்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

0 comments:

 
Copyright © 2016. thanjeee - All Rights Reserved